அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, February 18, 2013

பெற்றோருக்கு கிடைக்கும் சந்தோஷம்.



பெற்றோருக்கு கிடைக்கும் சந்தோஷம் பெற்றெடுத்த பிள்ளைகளால்!
சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் குழந்தை பெறுவது, அதைவிட சந்தோஷம் அக்குழந்தைகளின்மூலம் கிடைக்கபெறும் ஒவ்வொன்றும்.பெற்றெடுத்த குழந்தைகளை பாதுகாத்து வளர்த்து அதனை பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்காக வாழ்க்கை வழிகாட்டுதலை அறியச்செய்யும் பெற்றோருக்கு, பள்ளியில் பயிலும் தன்குழந்தை எல்லாதிலும் சிறப்பாக வரவேண்டுமென விரும்புவது எல்லா பெற்றோரின் ஆத்மார்தமான விருப்பம், அப்படியான விருப்பங்கள் படிப்படியாக நிறைவேறும்போது ஆனந்தம் ஆன்மாவை குளிர்விப்பதோடு,அது பொங்கிவந்து பக்கதிலிருப்போரையும் தொற்றிக்கொள்ளுமளவுக்கு வழிந்தோடும், அந்நிலைதான் எனக்கும். 

எனது அன்பு மகன் ”குற்றாலம்”  சையத் ரெஸிடன்ஸ் பள்ளியில் 9 வகுப்பு படிக்கிறான். அவன் கடந்த டிசம்பர் மாதம் டேபில்  டென்னிஸ் விளையாட்டில் முதலிடம் பெற்றான்.

 அதற்காக கொடுக்கபட்ட சர்ட்பிகெட். [இதுபோல் 2010 வரை துபையில் படிக்கும்போதும் நிறைய வாங்கினான்]

மேலும்,தற்போது தமிழ்நாடு ஸ்டேட் லெவல் இங்லீஸ் Proficiency Test டில், ஸ்டேட் லெவலில் இரண்டாமிடமும். 

டிஸ்டிக் லெவலில் முதலிடம் பெற்ற,இரு கோல்ட் மெடல்களும், ஒரு சர்ட்பிகெட்டும், வாங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ். இப்படியான சந்தோஷம் தந்த மகனை வாழ்த்தி,இந்த சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொடுத்த இறைவனை வேண்டி, இன்னுமின்னும் அவன் படிப்பிலும், வாழ்க்கையிலும், சிறந்து விளங்க மனப்பூர்வமாய் வேண்டிக்கொள்கிறோம்.




ஒவ்வொரு பிள்ளையும் படிப்பிலும், ஒழுக்கத்திலும், நல்லகுணத்திலும், சிறந்தவர்களாக விளங்கவேண்டும். சிறுவயதுமுதலே ஒழுக்கத்தையும், நற்சிந்தனைகளையும், படிப்பின் மகத்துவத்தையும்.,உழைப்பின் உந்துகோலையும், போதித்துவரும்போது,அதற்கான பலனாக படிப்பில் மட்டுமல்லாது அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

கேட்பதெல்லாம் வாங்கிக்கொடுப்பதோடு நம் கடமை முடிவதில்லை, அதை கொடுக்கும்போது இது எப்படி வந்தது, இதற்காக எத்தனை சிலவானது, இது கிடைக்கப்பெற்ற வழியென்ன என்பதினையும் பிஞ்சிலேயே பதியவையுங்கள். கேட்பது தற்போது கிடைக்காது என்பதையும் தக்க காரணங்களோடு புரியவையுங்கள் அவர்களுக்கு புரியும்படி!

பெற்றோர்களின் அனுசரனைகள் மிக முக்கியம், அதனை அகலாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள், அன்பு செலுத்துங்கள், அரைமணிநேரமேனும் சிலசெய்து அவர்களைபற்றிப்பேசுங்கள் அவர்களோடும் பேசுங்கள். 

 குழந்தைகள் பெரியவர்களானதும் பெரிய ஞானிகளாக இல்லாவிட்டாலும், நம்பிக்கையுடையோர்களாக! நல்ல பழக்கவழக்கமுடையோராக! எதையும் யோசித்துச் செய்யக்கூடியவர்களாக! எதையும் சாதிக்ககூடியவர்களாக வளர்வார்கள், வளமாக வாழ்வார்கள்...
என்றும் உங்கள்
அன்புடன் மலிக்கா

Wednesday, February 13, 2013

தொடரும் பெண்கொடுமைகளுக்கு முடிவென்ன?



காதலர் தினமாம் இன்று கொண்டாடப்படும் ஆங்காங்கு,
அட போக்கத்தர்வகளா  இந்த காதல் என்ற பெயரால் கருகிவிட்டதே அழகாய் அரும்பிய மொட்டொன்று!

காலம் காலமாய் தொடர்ந்துவரும் அநீதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்,
சமீப காலமாய் நடந்துவரும் அநீதங்களுக்கு ஒரு அளவேயில்லாமல் அல்லவா போய்க் கொண்டிருக்கிறது
குறிப்பாக பெண்களைக் குறிவைத்து இழைக்கப்படும் கொடுமைகள் கொடூரமாகவல்லவா
அரங்கேறிக் கொண்டிருக்கிறது
கண்ணெதிரே நடந்தும் கண்டுகொள்வார் யாருமில்லையென்றல்லவா கடக்கிறது சமூகமும் சட்டமும்.

சமூகம் என்ன செய்யும்! சட்டம் தன் கடமையை சட்டென்று செய்யவேண்டாமா?
இதுபோன்றவைகளுக்காகவாவது மட்டும்,
பிஞ்சுக் குழந்தையில் தொடங்கி பேதை வாழ்க்கையில் தொடர்ந்து, பாலியல் கொடுமையில் தொடங்கி
வன்மக் காதலில் தொடர்ந்து,
இப்படி முடிவில்லாத் தொடராக முற்றுப்புள்ளி வைக்கப்படாமலே பெண்களுக்கான கொடுமைகள்
நிகழ்ந்துக் கொண்டிருப்பதுதான்
வேதனையிலும் வேதனையளிக்கிறது!

இக்கொடுமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக, பத்தி பத்தியாக, எழுதியும் எங்குமே எடுபடவில்லையே!
கண்கூடாக காண்பிக்கப்பட்டும் எவர் காதிற்கும் எட்டவில்லையே! எவ்வித தண்டனையும்
தரப்படவில்லையே.. என்ன செய்ய?
இன்று காட்டுத்தீயாய் பரவும் ஒரு செய்தி இன்றே காற்றோடு கலந்து
கரைந்துவிடுவது போலாகிவிடுகிறது!
காட்டுத்தீயின் ஒரு கங்குக்கூட கொடூரமிழைத்தவர்களை நோக்கிச் செல்வதில்லையோ! என்ன
செய்துவிடுவார்கள் நம்மை என்ற ஏளனம், எது செய்தாலும் என்ன தண்டனை கிடைத்துவிடப் போகிறது
என்ற அலட்சியமே இன்னுமின்னும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்கதையாவதற்கும் ஒரு வாய்ப்பாகவும்
அமைகிறது!

பெண்ணென்றால் கிள்ளுக் கீரையாகவும் காட்டுப் பூவாகவும் ஆகிவிட்டது! வருவோரும் போவோரும்
கிள்ளி கசக்கி தூக்கிவீசிப் போனால் கேட்க நாதியற்றவர்களான நிலைதான் கவலைக்கிடமாய் தெரிகிறது!
எதைத்தான் நம்புவது? யாரைத்தான் நம்புவது? என பெண் மனங்கள் புழுங்கியே புண்ணாகிறது,
எங்கு நோக்கிலும் மோகம், எதை நோக்கினும் வன்மம், சதையுண்ணும் மாமிச பிண்டங்களின்
கைகளில் சிக்கியும், காதலென்ற பெயரில் களியாட்டங்கள் நடத்தியும், காதலேயில்லாமலும்
காதலால் துன்புறுத்தப்பட்டும், இன்னும் என்னென்ன வழிகளெல்லாம் வேதனை செய்ய முடியுமோ
அந்தந்த வழிகளிலெல்லாம் பெண்களுக்காவே விதவிதமான
ரணங்கள் ரத யாத்திரயாய் உருவெடுத்து உயிர் குடிக்கும் யுத்த யாத்திரையாய் உரைய வைக்கிறது.

தொடர்ந்து நடக்கும் கொடுமைகள் கண்கூடாய்தான் நடக்கிறது!
நடத்தியது யார்? நடத்துவது யார்? என்று உலகமே அறிந்தபோதிலும் குற்றம் நிகழ்த்திய
கொடூரன்களுக்கு கொஞ்சூண்டு தண்டனைகள்கூட கிடைப்பதில்லையே ஏன்? அப்படி என்னதான் வேண்டும்
இந்த சட்டத்துக்கு?
பிறர் கண்ணெதிரே நடந்தாலும், தனக்கு நடந்த கொடுமையை மரண நேரத்தில் சொன்னாலும்
சாட்சியில்லையென்றால் கொடூரன்களுக்கு கிடைக்காதோ தண்டனைகள்? தொடரும் கொடுமைகளுக்கு
முடிவு எப்போது? எப்படி?


நீதி தேவதை கண்ணை சற்று அவிழ்த்துவிடுட்டால்,
எத்தனை உயிருள்ள பெண்தேவதைகள் சீரழிக்கப்பட்டுவதும்,சீரழித்தவன்களோ சில நாள் சிறைவாசத்தோடு
மீண்டும் உல்லாசமாய் திரிவதையாவது தெரிந்து கதறியழும், தானே கண்ணைக்கட்டிக்கொண்டு கண்ணீர்விடும்!

அநீதிகள் செய்வோரை அடக்குவற்கே நீதி நெறிகள் கொண்டுவரப்பட்டது. தனக்கும், தன் குடும்பத்திற்கும்
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்பியிருப்போருக்கு நல்ல பதில்
சொல்லவேண்டும் நீதி!
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கேள்விப்பட்டுள்ளேன், அது தக்க சந்தர்ப்பத்திலேயே
செய்தால்தான் சீரழிவுகளும், வன்கொடுமைகளும், வக்கிரங்களும், இனியேனும் நடந்தேராமலிருக்கும்!

இனி இருக்கும் பெண் குழந்தைகளையும், இளம் மற்றும் பெண்களையும்  பாதுகாக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு கடுமையான
மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலேயொழிய, இதுபோன்ற சம்பவங்கள் சம்பவங்களாகவேதான்
தொடரும்!

தூணுக்கு புடவைகட்டினாலும் தொடக்கூடா இடத்தையும் தொட்டுப்பார்க்கும் வன்மமுடையோர் இருக்கும் இவ்வுலகில் காமம், கோபம்,
கண்ணை மறைக்கும்போது பெண்ணென நினைத்து பெண்சிலையும் சீரழிக்கப்படும் காலமாக மாறினாலும் அதர்ச்சி அடைவதிற்கில்லை!
இதுவரை எத்தனையோ பெண்ணினம் சீரழிக்கப்பட்டு, சித்தரவதைகுள்ளாகி, உடல்வதைபட்டு, உயிரையும்விட்டுகொண்டிருக்கிறார்கள்.
நேற்று டெல்லி மாணவி, இன்று தமிழ்நாட்டு வினோதினி,  நாளை..
 யார் யாரோ?
ஏன் அழகிய வடிவில் இருக்கும் நீதிதேவதையாகக்கூட இருக்கலாம்,ஏனெனில் அதுவும் சிலைவடிவில் இருக்கும் பெண்ணுருவமல்லவா!

பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள், மனிதராய் இருப்போரிடம் இல்லாமல் போகுதே இரக்கம்!

விடியும் நாளைப் பொழுதிலாவது எங்கேயிருந்தாலும் என்னினமான பெண்ணினத்திற்கு இதுபோன்ற
கொடுமைகள்
எதுவும் நடக்காமலிருக்கவும், அநீதியிழைத்தோருக்கு நீதி  நிச்சயம் நல்லதொரு தீர்ப்பை
வழங்குமென எதிர்ப்பார்த்தும்
இரு கரமேந்தி வேண்டிக்கொண்டே விடைபெறுகிறேன்..

அன்புடன் மலிக்கா

Wednesday, February 6, 2013

யாரும் யாருக்கும் எதிரியல்ல!






//வணக்கம். இலக்கியம்,கவிதைன்னு நிறைய பேசுறி(எழுதுறி)ங்க..
"விஸ்பரூபம்" பற்றி உங்களின் (மேலான) கருத்தென்ன மேடம்.
(உங்களின் பார்வையில் சொல்லவும்.பிளீஸ்..)//

//யக்கோவ் விஸ்வரூபம் வெளியாகிருச்சே தெரியாதா? அதுசரி நீங்க எதிர்ப்பு தெரிவிக்கலையா, ஒரு கவிதைகூட கிறுகலையேக்கா அச்சோஒ நான் நக்கல் பண்ணலீங்கோ.உங்க கவிதையைகளை ஒன்றுவிடாம படிக்கிறேன் முகநூலில் ஆனா கருத்துகள் போடுவதிலைங்கோக்கா, இனிமே தொடர்ந்து வருவேனுங்கக்கா..

இதாங்க காலம் சினிமாக்காரர்களின் காலம் அதபுரியாம உங்க ஆளுங்க போராடுறாங்களே அச்சோ அச்சோ, சொத்த படத்துக்கு சோக்கா கிடைக்கபோகுது கரண்சி..//

//அன்புடன் சகோதரி மலிக்கா அவர்களுக்கு, உங்கமதம் இப்படிதான் அடுத்தவங்க வயிற்றில அடிக்கச்சொல்லியிருக்கா, கமலின் பரிதாபநிலை உங்க மதக்காரங்களுக்கு புரியவில்லையா?
சினிமாவால் சில சீர்கேடுகள் இருக்கத்தான் செய்கிறது ஆனாலும் சினிமாவை சினிமாவாதானே பார்க்கவேண்டும் பதில் ப்ளீஸ்//


அன்பின் அன்பானவள் மேனகா, மற்றும் சகோ கிரண், மற்றும் சகோ சுதர்சன். அவர்களுக்கு,தாங்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட கேள்விக்கு பதில் ஒரு பதிவாகவே எழுதியுள்ளேன் இப்படியும் என்னை எழுதத்தூண்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்,உலகிலுள்ள நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! நமக்குள் வேற்றுமையை ஏற்ப்படுத்தநினைக்கும் சிலரால் நம்மை வேற்றுமைப்படுத்திவிடமுடியுமா?
மதம் என்பது மனிதனை நல்வழிப்படுதவே அனைத்து மதங்களும் அதைத்தான் போதிக்கின்றன, அவற்றைப்பின்பற்றுகிறேன் என்ற பெயரால் சில மனிதஜாதிகள் செய்யும் கேடுகெட்ட செயல்கள் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது என்பது வேதனைக்குறியது,

மார்க்கம்கூறாத ஒன்றை அதே மார்க்கத்தைச்சார்ந்தவன் செய்கிறான் அதனால்  இதுதான் அவன் மார்க்கம் , இப்படிதான் செய்யசொல்கிறது என சொல்வது அபத்தமானது, மேலும் இஸ்லாம் என்பது மதமல்ல மார்க்கம்,மனிதர்களை நெறிப்படுத்த வந்த மார்க்கம்.

இலக்கணத்தில் எழுத்துப்பிழையிருந்தால் திருத்திக்கொள்ளலாம், எல்லாம் முடிந்து அச்சிலேற்றிய இலக்கியத்தில் இலக்கணமே இல்லாதிருந்தால்?
என் இலக்கணத்தில் அடிக்கடி பிழையேற்ப்படும், அடித்து திருத்திவிடுவேன், ஆனால் பிறரின் குணக்களத்தில் பிழையிருந்தால் என் செய்வேன்?

இது கவிதையல்ல, கட்டுரையல்ல,
உணர்வுகள் மனங்களின் உணர்வுகள்
இது மனசாட்சியுள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும்
இவைகள் உணர்வாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்

தன்வீடு பற்றி எரியாதவரை நெருப்பு சுவாலையின் கொடூரத்தை அறியமுடியாது,அதுபோல்தான்
எந்த ஒரு பாதிப்பும் தான் அடையாதவரை அதன் சாரத்தை நாம் உணரமுடியாது,
பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் திரைப்படங்கள், பொழுதுபோக்கோடு சேர்த்து பொடுபோக்காக பிறமனங்களை புண்படுத்ததொடங்கி தொடர்ந்து வருகிறது [எல்லாத்தரப்பிலும், என்றாலும் இஸ்லாத்தையும் அதனை பின்பற்றும் இஸ்லாமியர்களை கொஞ்சமல்ல நிறையவே கேவலப்படுத்தி காயப்படுதுகிறார்கள் என்பதை தாங்களெல்லாம் மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

முட்டாள்களும் மூர்க்கர்களும் எல்லாயிடத்திலும் உண்டு, அப்படி சிலர் செய்யும் காரியங்களை இவைகளைத்தான் செய்யச்சொல்கிறதென திருமறையின்மேல் பழிபோடுவதும்
நேர்வழிகாட்டவந்த மார்க்கத்தின்மேல் குற்றஞ் சுமத்துவதும் சரியா?

பிறமதக்கடவுள்களை ஏசுகிறவன் என்னையே ஏசுவதைப்போலாவான் என்கிறான் இறைவன்
இவ்வசனம் இறைவேதமான திருகுர்ஆனில் உள்ளது, அப்படி பிற மதங்களையும், பிறமத மனிதர்களையும்
இழிவுபடுத்தவேண்டாம் என்று வன்மையாக கண்டிக்கிறது இஸ்லாமிய மார்க்கம், அப்படியான மார்க்கத்தில் வந்திருக்கும் ஒருசிலர் தவறான புரிதல்களால் அறிவிலியாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்க ஒன்றே,

எங்கோ யாரோ இம்மதம் எனக்கூறி
இஸ்லாத்தின் பெயர்தாங்கி மனிதர்கள் புரியும் செயல்களுக்காக,
இம்மதம்தான் அனைதிற்க்கும் காரணகர்த்தா என்று சொல்வது எவ்வகையில் நியாயமானது?[மீண்டும் சொல்கிறேன் இது மதமல்ல மார்க்கம்]
இம்மார்க்கத்தை பின்பற்றும் அனைவரும் இதே கொள்கையோடுதான் செயல்படுவார்கள் என வீண்பழி சுமத்துவது எந்தத்தரப்பிலான நீதியானது?

அதற்காக இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் மார்க்கத்தைப் பற்றியும், இறைமறையாம் திருமறைப் பற்றியும், இறைத்தூதுவர் திரு நபிபற்றியும்,
சிறிதளவும் தெரிந்துகொள்ளாமல் அல்லது தெரிந்துகொண்டே வேண்டுமென்று, கடைந்தெடுத்த  அப்பட்டமான பொய்களை, கலைகளென்ற பெயராலும், பொழுதுபோக்குகள் என்றபெயராலும் சித்தரிப்பது மிக மிக  கண்டிக்கதக்க ஒன்று என்பதை மனசாட்சியுள்ள மனிதநேயமுள்ள பிறமன உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனங்கள் ஒப்புக்கொள்ளாமலிருப்பது சரியாகுமா?

3 மணிநேர பொழுதுபோக்கு அம்சங்களை பொழுதுபோக்காகவே சித்தரிக்கத் தொடங்கியவர்கள் மத்தியில் வன்முறை வெறியை சின்னஞ்சிறு வயதிலிலேயே தூண்டும், காமங்களை கற்றுக்கொடுக்கும், நூதன திருட்டுக்கு வழிவகுக்கும், இன்னும் ஒருபடிமேலேபோய் எப்படியெல்லாம் நுணுக்கமாக கொலை செய்வது என்பது பற்றியும், இன்னும் கீழ்த்தரமாகபோய்
8, 10 வய்திலேயே  காதல் தொடங்கிக்கொள்வது, கள்ளத்தனம்புரிவது எப்படி என்பது பற்றியும்?பிறரின் கணவன் மனைவியை அடைவது மற்றும், பிற சொத்துக்களை சூரையாடுவது எப்படி என்பதைப் பற்றியும்?
ஆபாசங்களின் உச்சக்கட்ட நிலைகளை கண்கூடாக அறியத்தருவதெப்படி என்பதைப்பற்றியும்? இன்னும் வழக்கதில் இல்லாத எத்தனையோ வகைகளை பொழுதுபோக்கு என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கு
அளவேயில்லாமல் போய்கொண்டிருக்கிறது.

ஆபாசங்களும் அத்துமீறல்களும் அளவுக்கு மீறியவகையில் பொழுதுபோக்குகளில் கண்டு களிக்கும்
 இளம் பிஞ்சுகள் அதனை தேனாக நினைத்து தொட்டுக்கொள்கிறது போகபோக நஞ்சாக வேறுன்றி தன்னையே அழிப்பது அறியாமலே! அப்படியே அறிந்தாலும் அதனின் நின்றும் மீளமுடியாமலே!
மேலும் இப்படியான சூழலில் நின்றும் காப்பாற்ற தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் பரிதாபதிற்க்குரியவர்களே!

இதெல்லாம் சொல்லிதான் தெரியவேண்டுமா? 5 வயதிலேயே தொடங்கி முத்தங்களும் கட்டிப்பிடித்தல்களும்கூட இன்றைய இளம் சிறார்களுக்கு நன்கு விளக்கம்தரக்கூடியளவுக்கு காண்பிக்கப்படுவதும், கோடிக்களுக்காக கொள்கையுடையோரையும், கோட்பாடுகளை மதிப்போரையும் கொடும்பாவிகளாய் சித்தரிப்பதும், அந்த கொள்கையே தவறானதென வாதிடுவதும் எவ்விதத்திலாவது நியாயம் இருக்கா? மனசாட்சியோடு சொல்லுங்கள் சினிமாவை சினிமாகவாத்தான் பார்க்கமுடிகிறதென!

பொழுதுபோக்கோடு வாழ்க்கைக்குத்தேவையான வகைகளில் திரைப்படமோ அல்லது சீரியலோ எடுக்கமுடியாதா?[அட கோடிக்கள் கிடைக்காதோ]
வாழ்க்கையில் முன்னேறுவது!ஜெயிப்பது எப்படி! தனிமனித ஒழுக்கம்  சமுதாய ஒழுக்கம், சமுதாயத்தை நல்வழி படுத்துவது, குடும்பதை வழிநடத்துவது, குழந்தைகளை வளர்ப்பது,! உழைத்து சம்பாரிப்பது ,உருப்படியாய் வாழ்வது எப்படியென இப்படியான நற்சிந்தனையோடுகூடிய நகைசுவைகளோடும் நல்ல சிந்தனைகளை தூண்டகூடிய வகையிலும், ஆபாசங்களை புகுத்தாமல் அத்துமீறுதல் இல்லாமல் நல்லவழிகளை எடுத்துச்சொல்ல ஆயிரமாயிரம் இருக்கையில்,

 ஏன் இப்படி அடுத்தவர்களை புண்படுத்திப் பார்ப்பதிலும் அடுத்தவர்களை அழிக்க நினைப்பதிலுமே சிலர் குறியாக அலைகிறார்களென்றுதான்  புரியவில்லை? பணம் குவிக்க என்னவேண்டுமானால் செய்யலாம் என்ற காரணமோ? இல்லை குறுகிய மனப்பான்மையோ! இல்லை பிறரை எவ்வழியாயினும் வேரறுக்கவேண்டுமென்ற கெட்ட எண்ணமோ! இதில் எதுவென்றபோதும் அது மனிதகுலத்துக்கு சிறந்ததல்ல,நல்லதுமல்ல!
பிற மன உணர்வுகளை புண்படுத்தி கோடிக்குமேல் கோடிகள் வசூல் ஆனாலும், இப்பூமியைவிட்டு போகும்போது பிறர் அவர்களுக்கு போடும் வாய்கரிசிக்கூட வாயிற்குள் சேராது என்பதை புரியாதவர்களாகவா இருக்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்களை மதம் சார்ந்தவர்களாக பார்க்காதீர்கள், மன உணர்வுகளை மதிப்பவர்களாக பாருங்கள்.
உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லையா அதனில் நின்றும் தவிர்ந்துகொள்ளுங்கள்,விளகிக் கொள்ளுங்கள்
அதைவிடுத்து இதுதான் சரி அதுதான் சரியென உண்மையை மறைத்து பொய்மையை இணைத்து வாதிடுவோர்களின் கூற்றுக்களை தயவுசெய்து ஆராயுங்கள் அப்போதுதான் உண்மை எதுவெனப் புரியும்.

நம்கண்முன்னோ அல்லது முதுகுக்குபின்னோ நம்மையோ! நம் தாய்தந்தையையோ பிறர் கேவலப்படுத்தினால் நாம் தாங்கிக்கொள்வோமா? நாம் என்ன செய்வோம்?

நமக்கு நடந்தாலே ஜீரணிக்க முடியாத நம்மால், நம்மையும், நம்பெற்றோர்களையும் இன்னும் இந்த அகிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும்,படைத்து பாதுகாக்கும் இறைவனையும், அவன் அனுப்பிய தூதரையும், தூதர்வழிவந்த திருமறையும்,இவையனைத்தும் ஒன்றிணைந்த மார்க்கத்தையும் கேவலப்படுத்தினாலும், இழிவுபடுத்தினாலும் சினிமாவை சினிமாவாகப்பாருங்கள் எனசொல்வது சரியா சகோதரரே?

இது மதவெறியல்ல இனவெறியல்ல, உணர்வுகளின் வலி, மார்க்கம் சொல்லாத ஒன்றை, இப்படித்தான் சொல்கிறது இவர்கள் செய்கிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டிற்க்கு, இல்லை அப்படியில்லை இது உண்மையில்லை எங்கோ யாரோ தவறு செய்தால் அது மார்க்கத்தை சார்ந்ததல்ல என்பதை புரியவைப்பதற்காத்தான் தற்போது இஸ்லாமியர்கள் இப்படத்தை எதிர்கிறார்கள்,

இதுவரை தனது சுயரூபங்களை கண்டும் காணாமலும் கழிசடையாய் கக்கிக்கொண்டு திரிந்தவர்களுக்காகவும், தற்போது தனது சுயரூபத்தை விஸ்வரூபமாய் காட்டியமைக்காவும், இனிமேலும் கேளிக்கை கூத்துக்களுக்காக தூயவைகளை தூசாக எண்ணி வில்லங்கத்தை விதைக்காமலிருப்பதற்காகவும்,அமையாதியான முறையில் ஆர்ப்பரித்து தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது இஸ்லாமியக்கடல்,இப்படத்தைமட்டுமல்ல இதுபோன்று வந்தவைகளுக்காவும் ,

இனிமேலும் வரமாலிருக்கவும்,உறுதியான இறைநம்பிக்கையில் உரைந்தவர்கள் விசுவாசங்கொண்ட இறைவனுக்காக அமைதியான வழியில் யார்மனதும் புண்படாவாறு,  தங்களது எதிர்ப்பை காட்டுவதில் தவறேதும் உண்டா?
எத்தனை சுயரூபங்கள் விஸ்வரூபமெடுத்தாலும்,வீழ்த்திடவோ இழிவுபடுதிடவோ முடியாது இஸ்லாத்தை என்பதை நிச்சயம் ஒருநாள் உணரும் இழிவையெண்ணும் இதயங்கள்.

மேலும் தற்போது இந்த பிரச்சனையை வைத்து வெவ்வேறு வழிகளில் சூழ்ச்சிகளும்  நாடகங்களும் நடந்தேறுகிறது , அநியாயப்பழிகளும் சுமத்தப்படுகிறது என்பதை அறியாதவர்களா தமிழ்நாட்டுமக்கள்,யார் எவ்வித நாடங்கள் நடத்தி அதை நம்ப வைக்க எவ்வழிக்குபோனாலும், பொய் ஒருபோதும் நீடிக்காது என்பது அசத்தியம் அழிந்து சத்தியம் வெல்லும்போது நிச்சயம் புரியும். யாரும் யாருக்கும் எதிரியில்லை!நம்மில் யாரும் யாரையும் எதிரியாய் நினைப்பதை விரும்புவதுமில்லை, எல்லோரும் உடன்பிறப்புக்களே!

ஒரே தாய் 5 பிள்ளை பெற்றிருந்தாலும் 5 ம் ஒற்ற குணமுடையவர்களாக இருப்பதில்லை, சிறு சிறு மாற்றங்களும், சிறுசிறு சங்கடங்களும் இருக்கத்தான் செய்யும், அதுபோல்தான் நாமும், நம்மில் குறைகள் இருக்கத்தான் செய்யும் , அச்சிலேற்றுமுன் இலக்கண பிழைகளை சரிசெய்வதுபோல், நமது மனக்குறைகளை  கண்டதும்  சரிசெய்துகொள்வது நம் மனதிடமே உள்ளது, எண்ணுவது சிறப்பானால் எல்லாமே சிறப்பாகும்.

சிந்திப்போருக்கே இப்பூமி விசாலமாக்கப்படுகிறது, தீயசிந்தனை தெளியும்போதும் தெளிவாக புரிந்துகொள்வார்கள்,
இதுவரை இருண்ட வழிகேட்டில் இருந்தவற்றை உணர்ந்து திருந்துவார்கள் மனதளவிலாவது. எல்லாம் வல்ல இறைவனே அதற்க்கு போதுமானவன்,அவனே அனைத்தையும் நன்கறிந்தவன், அவனே இவ்வுககிற்க்கும் எனக்கும் உங்களுக்கும் என்றும் பாதுகாவலன்.

மீண்டும் உங்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.